மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணி : முதல்வர் கருணாநிதி உறுதி

>> Tuesday, December 22, 2009



சென்னை : ""வரும் ஆண்டில் பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும்,'' என மேட்டூர் அணையின் பவள விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


மேட்டூர் அணை கட்டப்பட்டு, 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் பவள விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் கருணாநிதி வாழ்த்திப் பேசினார். மேலும், பவள விழா கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டவும் செய்தார்.


அப்போது முதல்வர் பேசியதாவது: ஆங்கிலேய ஆட்சி, காவிரியில் அணை கட்டுவதற்குரிய இடத்தை ஆய்வு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்க நாயக்கர் குறிப்பிட்ட இடமான மேட்டூரை தேர்வு செய்தது. கர்னல் எல்லிஸ் என்ற புகழ்பெற்ற ராணுவப் பொறியாளர், 1910ம் ஆண்டில் அணையை வடிவமைத்து, உரிய மதிப்பீடுகளோடு ஆங்கிலேய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.அதே காலகட்டத்தில், அன்றைய மைசூரு சமஸ்தானமும், பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா உதவியுடன் காவிரியில் மைசூரு அருகே கிருஷ்ணராஜசாகர் நீர்த் தேக்கத்தை அமைக்க, ஆங்கில அரசிடம் அனுமதி கோரியது.எனவே, காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக அப்போதே பிரச்னைகள் எழுந்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பின் 1924ம் ஆண்டில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு அரசுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. 1924ம் ஆண்டு தான் காவிரிப் பிரச்னை ஆரம்பமானது.


அதே ஆண்டு தான் நானும் பிறந்தேன்.பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்னைக்காகத் தான் வாதாடிக் கொண்டிருக்கிறேன்; போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த உடன்படிக்கைக்குப் பின், காவிரியில், மேட்டூர் அணையை கட்ட ஆறு கோடியே 12 லட்சம் ரூபாயை அனுமதித்து, 1925ல் இங்கிலாந்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்தன.பொறியாளர் சர்.கிளமென்ட் முல்லிங்ஸ் தலைமையில் தமிழக பொறியாளர்கள், தொழிலாளர்கள், குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல் தச்சுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, மேட்டூர் அணையின் கட்டுமான வேலைகளை 1925 ஜூலை 20ம் தேதி துவங்கி, 1934ம் ஆண்டு ஜூலையில் முடித்தனர்.


ஒன்பது ஆண்டுகளில், 120 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கும் வகையில், 5,300 அடி நீளமும், 171 அடி அகலமும் உடையதாக கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து 1934 ஜூன் 12 அன்று முதன் முதலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு அச்சாணி காவிரி தான். காவிரிக்கு பெருமை சேர்ப்பது மேட்டூர் அணை. இந்த அணைக்கு 75 வயது முடிந்து, பவள விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட போது, இது ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம், இன்று தமிழகத்தின் தலையாய நீர்த்தேக்கம்.இந்த அணைக்குக் கீழே வெள்ளக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்த, கரிகால் சோழன் கட்டிய கல்லணையைத் தவிர வேறு அணை ஏதும் இல்லாத குறையைப் போக்கக் கருதிய இந்த அரசு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க இந்த ஆண்டு பிப்ரவரியில் 189 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய பணிகளை நிறைவேற்றி வருகிறது.


இந்த கதவணை மூலம் தேக்கப்படும் வெள்ள நீர், வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்படும். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைச் செப்பனிட மத்திய அரசு 375 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மாநில அரசின் பங்காக 93 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெற, தி.மு.க., அரசு அமையும் போதெல்லாம் காவிரியாற்றிலும், கிளை ஆறுகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


வரும் ஆண்டில், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து, பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தொன்மை வாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றை சீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் உதவும் வகையில், தமிழக அரசு 5,100 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு பெருந்திட்டத்தை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.


இந்நிலையில், மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக இதன் வலது கரையில் உள்ள குன்றின் மேல் 75 அடி உயரத்தில், பவள விழா கோபுரத் தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், இயற்கை காட்சிகளையும், மேட்டூர் நகரையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்தை நிறைவேற்ற, இந்த அரசு ஒரு கோடி ரூபாயை அனுமதித்துள்ளதுடன், அதற்காக இன்று (நேற்று) அடிக்கல் நாட்டியுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP